Archives: ஏப்ரல் 2022

இராக்காலத்தின் ஊழியக்காரர்கள்

அந்த தீவிர சுகாதார மருத்துவமனையில் அதிகாலை 3 மணி. ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே நாலாவது முறையாக அந்த கவலையுற்ற நோயாளி அழைப்பு மணியை அழுத்துகிறார். சற்றும் சலிப்பின்றி அந்த இரவுப்பணி செவிலியர் பதிலளிக்கிறார். உடனே மற்றொரு நோயாளி பராமரிப்பிற்காக அலறுகிறார். இதுவும் அச்செவிலியரை ஆச்சரியப்படுத்தவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன், தன் மருத்துவமனையின் பகல்நேர பரபரப்பை தவிர்க்கவே இரவுப்பணியை கேட்டுப்பெற்றாள். அப்பொழுது தான் உண்மை உரைத்தது. இரவுப்பணியில் எப்போதுமே நோயாளிகளை தனியாக தூக்குதல், நகர்த்துதல் போன்ற கூடுதல் பணிகளிருந்தன. மேலும் நோயாளிகளின் நிலையை கூர்ந்து கவனித்து, அவசர நேரங்களில் தக்க மருத்துவரை அழைக்கவும் வேண்டியிருந்தது.

சக இரவுப்பணியாளர்களின் நெருங்கிய நட்பு ஆறுதலாயிருப்பினும், இந்த செவிலியர் போதுமான தூக்கமின்றி அவதிப்படுகிறார். தன் பணி மிக முக்கியமானது என்று கண்டு, தனக்காக ஜெபிக்குமாறு தன் சபையாரை அடிக்கடி கேட்பார். தேவனுக்கே மகிமை! அவர்கள் ஜெபங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அவர் இப்படி துதிப்பது ஒரு இரவுப்பணியாளருக்கு நல்லது. நமக்கும் அது நல்லதே. சங்கீதக்காரன், “இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” (சங்கீதம் 134:1–2) என்றெழுதுகிறார்.

இந்த சங்கீதம், ஆலய காவலாளர்களாய் இரவும் பகலும் தேவனுடைய ஆலயத்தை பாதுகாக்கும் லேவியர்களின் முக்கியப்பணியை பாராட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான உலகில், இந்த சங்கீதத்தை குறிப்பாக இரவுப்பணியாளர்களுக்கு பகிர்வது ஏற்றதாயிருக்கும், எனினும் நாம் அனைவரும் தேவனை இரவிலும் துதிக்கலாம். சங்கீதக்காரன், “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக” (வச. 3) என்று ஆறதல்படுத்துகிறார்.

ஆவிக்குரிய நோய் கண்டறிதல்

என் மாமனாரின் கணையத்திலிருந்த புற்றுநோய் கட்டியை கிமோ சிகிச்சை கட்டுப்படுத்தியது, ஆனால் பலனளிக்கவில்லை. அக்கட்டி மீண்டும் வளர ஆரம்பிக்க, அவர் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் தன் மருத்துவரிடம், “இந்த கிமோ சிகிச்சையை நான் இன்னும் தொடரத்தான் வேண்டுமா? ஒருவேளை மாற்று மருந்தோ, கதிர்வீச்சு சிகிச்சையை முயற்சிக்கலாமா?” எனக் கேட்டார்.

யூத ஜனங்களும் தங்கள் ஓட்டத்தில் வாழ்வா சாவா என்ற கேள்வியோடிருந்தனர். யுத்தத்தினாலும், பஞ்சத்தினாலும் சோர்ந்துபோன தேவ ஜனங்கள், தங்கள் பிரச்சனைக்கு காரணம் அதிகமான விக்கிரக ஆராதனையா, அல்லது விக்கிரக ஆராதனை போதுமானதாக இல்லையென்பதா என குழம்பினர். வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அதற்குப் பானபலிகளை அதிகம் வார்த்தால், அது தங்களைப் பாதுகாத்து, செழிப்படையச் செய்யும் என முடிவெடுத்தனர் (எரேமியா 44:17).

அவர்கள் மிகவும் தவறாக தங்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டதாக எரேமியா சொல்கிறார். விக்கிரகத்தை ஆராதிப்பதில் ஏதேனும் தவறு செய்துவிட்டோமா என்று அவர்கள் யோசித்தனர், ஆனால் அந்த விக்கிரகங்களை அவர்கள் வைத்திருந்தது தான் அவர்களின் தவறு. அவர்கள் தீர்க்கதரிசியைப் பார்த்து, “நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்” (வச. 16) என்றார்கள். எரேமியா, “நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்” (வச. 23).

யூதாவைப் போலவே, நாமும் நம்மை சிக்கலில் அகப்படுத்திய பாவங்களை இருமடங்காக்கச் செய்ய தூண்டப்படலாம். உறவில் சிக்கலென்றால் நாம் தனித்து வாழ்கிறோம்; பணப்பிரச்சனை என்றாலும் நம் விருப்பப்படியே செலவுசெய்கிறோம். ஒதுக்கிவைக்கப்பட்டால் நாம் அதற்கு சமமாக மூர்க்கமடைகிறோம். ஆனால் நம் பிரச்சனைகளுக்கு காரணமாயிருந்த விக்கிரகங்கள் நம்மை காப்பாற்றப் போவதில்லை. நாம் இயேசுவிடம் மனந்திரும்பும்போது, அவரே நம் பிரச்சனைகளினூடே நம்மை தூக்கி சுமப்பார்.

விசுவாசத்தில் வளர்தல்

என் தோட்டக்கலை பயணத்தின் ஆரம்பத்தில், நான் காலமே எழுந்து என் காய்கறி தோட்டத்திற்கு விரைந்தோடி, ஏதாகிலும் புதிதாய் முளைத்துள்ளதா என பார்ப்பேன். ஒன்றுமிருக்காது! “விரைவான தோட்ட வளர்ச்சி” என்று இணையத்தில் தேடுகையில், செடியின் வாழ்நாளில் நாற்று பருவமே மிக முக்கியமென்று கற்றுக்கொண்டேன். இம்முறையை விரைவாக்க இயலாது என அறிந்தவளாக, விண்ணை நோக்கி மண்ணிலிருந்து முளைத்தெழும் தளிர்களின் வலிமையையும், பருவநிலை மாற்றத்திற்கேற்ற அவைகளின் எதிர்பாற்றலையும் வெகுவாய் ரசித்தேன். சில வாரங்கள் பொறுமையாய் காத்திருந்தபின், பச்சை மொட்டுக்கள் மண்ணிலிருந்து வெடித்தெழும்பி என்னை வரவேற்றன.

சிலவேளைகளில், நம் சுபாவத்தின் வளர்ச்சியானது காலப்போக்கிலும், போராட்டத்தின் மூலமாகவும் தான் உண்டாகுமென்று நாம் அறிவதில்லை. அதினால் நம் வாழ்வின் வெற்றிகளையும், அதினால் உண்டாகும் மகிழ்ச்சியையும் சுலபமாக கொண்டாடுகிறோம். யாக்கோபு, “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, ... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக்கோபு 1:2-3) என்று நம்மை அறிவுறுத்துகிறார். ஆனால் சோதனைகளைக் குறித்து சந்தோஷப்பட என்ன இருக்கிறது?

சிலசமயம், தேவன் நம்மை சவால்களினூடும், கஷ்டங்களினூடும் செல்ல அனுமதிக்கிறார். அதினால் நாம் அவருடைய அழைப்பிற்கேற்றபடி வனையப்பட முடியும். “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” (வச. 4) நம் வாழ்வின் சோதனைகளிலிருந்து நாம் வெளியே வர தேவன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இயேசுவில் உறுதியாய் நாம் நிலைத்திருக்கையில், எத்தகைய சவாலிலும் நீடியபொறுமையாய், வலிமையாக வளர்ந்து முடிவில் ஆவிக்குரிய கனியானது நம் வாழ்வில் மலரக் காண்போம் (கலாத்தியர் 5:22–23). ஒவ்வொரு நாளும் நாம் உண்மையாக செழித்தோங்க தேவையான ஊட்டச்சத்தை, அவருடைய ஞானமே நமக்குக் கொடுக்கிறது (யோவான் 15:5).

மீண்டும் பாடுங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபல ரீஜண்ட் தேனுண்ணி பறவையினம் ஆபத்திலுள்ளது. அதின் இன்னிசைக்குரல் குருகுகிறது. முன்னர் அதிகளவில் இருந்தவை, தற்போது வெறும் முன்னூறு பறவைகளே மீந்துள்ளனவாம். கற்றுத்தர கூடியவைகள் சிலமட்டுமே உள்ள நிலையில், ஆண்பறவைகள் தங்கள் தனித்துவமான பாடலை மறந்து, தங்கள் துணையை ஈர்க்க தவறுகின்றன.

அதிர்ஷ்டவசமாக சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் இந்த தேனுண்ணிகளை மீட்க ஒரு திட்டம் வகுத்துள்ளனர். அவைகளுக்காக தாங்கள் பாடுவதே அந்தத் திட்டம். அதாவது, பிற தேனுண்ணிகள் பாடுவதை ஒலிப்பதிவு செய்து அவைகளைக் கேட்கச்செய்தால், தங்கள் ஆழ்மனதில் உள்ள பாடலை மீண்டும் கற்கின்றன. ஆண் பறவைகள் இசைமெட்டோடு பாடுகையில் தங்கள் ஜோடிகளை மீண்டும் ஈர்க்கும். அவ்வாறு செய்வதின் மூலம் இனவிருத்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
தீர்க்கதரிசி செப்பனியா, உபத்திரவத்திலிருந்த ஜனங்களிடம் பேசுகிறார். தங்களுக்குள் மிகவும் சீர்கெட்டுபோனதால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருவதாக உரைக்கிறார் (செப்பனியா 3:1–8). பிற்காலத்தில், கைப்பற்றப்பட்டு சிறையிருப்புக்குள் செல்வதின் மூலம் இது நிறைவேறுகையில், ஜனங்களும் தங்கள் பாடலை மறந்தனர் (சங்கீதம் 137:4). ஆனால் செப்பனியா, நியாயத்தீர்ப்புக்கு பின்னான காலகட்டத்தை முன்னமே பார்க்கிறார். நாடுகடத்தப்பட்ட இந்த ஜனங்களிடம் தேவன் வந்து, அவர்கள் பாவங்களை மன்னித்து, அவர்களுக்காக பாடுகிறார், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதின் முடிவாக, ஜனங்களின் ஆத்மார்த்தமான பாடல் மீட்டெடுக்கப்படும் (வச. 14).

நம்முடைய கீழ்படியாமையாலோ, வாழ்வின் சோதனைகளாலோ நாமும் நம் மனதிற்கினிய பாடலை இழந்திருக்கலாம். ஆனால் நமக்காக மன்னிப்பின் பாடல்களையும், அன்பின் பாடல்களையும் ஒரு குரல் பாடுகிறது. நாமும் அவருடைய இசையை கவனித்துக்கேட்டு அவரோடு சேர்ந்து பாடுவோமாக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நம்மைக் காத்துக்கொள்ள முயற்சித்தல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரம் “பாதுகாப்பாக இருங்கள், ஸ்டே புட்” என்ற விளம்பரப் பிரச்சாரம், மின்தூக்கியில் சிக்கிக்கொள்பவர்களின் அறிவூட்டலுக்காக ஏறெடுக்கப்பட்டது. அவ்வாறு சிக்கிக்கொண்ட பயணிகள் பயத்தில் மின்தூக்கியின் கதவை திறக்கமுயன்றபோதும், வேறு வழிகளில் வெளியேற முயன்றபோதும் உயிரிழக்க நேரிட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உதவிக்கு அழைப்பதற்கும், அவசரகால பதிலளிப்பவர்கள் வரும் வரை காத்திருப்பதற்கும் அலாரம் பொத்தானைப் பயன்படுத்துவதே அத்தருணத்தில் சிறந்த செயல்திட்டமாகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் வித்தியாசமான மீட்புத் திட்டத்தை விவரித்தார். பாவத்தினால் பின்னாக இழுக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் அமைந்தது. அவர் எபேசியர்களுக்கு “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (எபேசியர் 2:1) என்று அவர்களுடைய முழுமையான ஆவிக்குரிய உதவியற்ற தன்மையை பவுல் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். அவர்களும் பிசாசுக்கு கீழ்படிந்து அந்த வலையிலே சிக்கியிருந்தனர் (வச. 2). இதன் விளைவாக அவர்கள் தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாகினர். ஆனால் அவர் அவர்களை ஆவிக்குரிய இருளில் சிக்கவைக்கவில்லை. அந்தகார இருளில் இருந்த  நீங்கள் “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (வச. 5,8) என்று பவுல் எழுதுகிறார். தேவனுடைய மீட்பு நம்முடைய விசுவாசத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. விசுவாசம் என்றால் நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது என்று தேவனிடத்தில் உதவிகோருவது என்ற அர்த்தம். 

தேவனுடைய கிருபையால், பாவத்தின் வலையில் இருந்து மீட்கப்படுவது நம்மிடம் இருந்து உருவானது அல்ல. இது இயேசுவின் மூலமாக நமக்கருளப்பட்ட “தேவனுடைய ஈவு” (வச. 8). 

 

பூத்து குலுங்கும் பாலைவனம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எத்தியோப்பியாவில் சுமார் 40 சதவிகிதம் பசுமையான காடுகள் இருந்தது. ஆனால் தற்போது அது 4 சதவிகிதமாக மாறியுள்ளது. மரங்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், பயிர்களுக்கான பரப்பளவை அகற்றுவது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மீதமுள்ள பச்சை நிறத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் திருச்சபைகளினால் பாதுகாக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, உள்ளூர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் டெவாஹிடோ திருச்சபைகள் தரிசு பாலைவனத்தின் மத்தியில் இந்த சோலைகளை வளர்த்து வருகின்றன. நீங்கள் வான்வழிப் படங்களைப் பார்த்தால், பழுப்பு நிற மணலால் சூழப்பட்ட பசுமையான தீவுகளைக் காணலாம். திருச்சபை தலைவர்கள் தேவனுடைய படைப்பான மரங்களைப் பராமரிப்பது தேவனுக்கு கீழ்படிதலின் பிரதிபலிப்பு என்று தங்களை உக்கிராணக்காரர்களாய் கருதுகின்றனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு வறண்ட பாலைவனத்தில் கொடூரமான வறட்சியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு எழுதுகிறார். மேலும் ஏசாயா, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்” (ஏசாயா 35:1) என்று தேவன் அவர்களுக்காய் முன்குறித்திருக்கிற எதிர்காலத்தை உரைக்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை சுகமாக்க விரும்புகிறார். அவர் பூமியையும் சுகமாக்க விரும்புகிறார். தேவன், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) உண்டாக்குவார். தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட உலகத்தில், வனாந்திரம் “மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (35:2). 

தேவனுடைய படைப்பின் மீதும் மக்களின் மீதும் அவர் காண்பிக்கும் அக்கறையானது நம்மையும் அவ்வாறு செய்வதற்கு தூண்டுகிறது. அவருடைய படைப்புகளை பராமரிப்பதின் மூலம் முழு உலகத்தையும் குணமாக்கும் அவருடைய பிரதான திட்டத்தின் அங்கத்தினர்களாய் நாம் மாறக்கூடும். அனைத்து வனாந்திரங்களையும் பூத்துக் குலுங்கச்செய்யும் தேவனுடைய திட்டத்தில் நாமும் பங்காளர்களாய் மாறலாம். 

 

பார்ப்பதற்கு கண்கள்

பல ஆண்டுகளாக குடிப்பழக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகளால் போராடி வந்த தன் உறவினர் சாண்டிக்காக ஜாய் கவலைப்பட்டாள். அவள் சாண்டியின் அபார்ட்மெண்டிற்குச் சென்றபோது, கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அது காலியாகத் தெரிந்தது. அவளும் மற்றவர்களும் சாண்டியைத் தேடத் திட்டமிட்டபோது, “தேவனே, நான் பார்க்காததைக் காண எனக்கு உதவுங்கள்” என்று ஜாய் ஜெபித்தாள். அவர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேறும்போது, ஜாய் சாண்டியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அங்கிருந்த திரைச்சீலை அசைந்ததை அவள் பார்க்க நேரிட்டது. அந்த நேரத்தில், சாண்டி உயிருடன் இருப்பதை அவள் அறிந்தாள். அவளை அடைய அவசர உதவி தேவைப்பட்டாலும், இவ்விதமான ஜெபத்தை ஏறெடுத்ததற்காய் ஜாய் மகிழ்ச்சியடைந்தாள்.

எலிசா தீர்க்கதரிசி, தேவன் தன்னுடைய பராக்கிரமத்தை அவருக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கும்பொருட்டு விண்ணப்பிக்கிறார். சீரிய இராணுவம் அவர்களுடைய பட்டணத்தைச் சுற்றி வளைத்தபோது, எலிசாவின் வேலைக்காரன் பயத்தில் நடுங்கினான். இருப்பினும், அவன் தேவனுடைய மனுஷனாய் இல்லாதபோதிலும், தேவனுடைய உதவியினால் காணக்கூடாததை அவன் கண்டான். எலிசா தன்னுடைய வேலைக்காரன் காணவேண்டும் என்று ஜெபிக்க, “இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2 இராஜாக்கள் 6:17).

எலிசாவுக்கும் அவனுடைய வேலைக்காரனுக்கும், ஆவிக்குரிய மற்றும் மாம்ச வாழ்க்கைக்கு இடையே இருந்த திரையை தேவன் விலக்கிவிட்டார். திரைச்சீலையின் சிறிய மின்னலைக் காண தேவன் ஜாய்க்கு கிருபையளித்தார் என்று அவளும் நம்புகிறாள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஆவிக்குரிய தரிசனத்தைக் கொடுக்கும்படி நாமும் அவரிடம் விண்ணப்பிக்கலாம். நம் அன்புக்குரியவர்களுடனோ அல்லது நமது சமூகங்களிலோ, நாமும் அவருடைய அன்பு, உண்மை மற்றும் இரக்கத்தின் பிரதிநிதிகளாக திகழமுடியும்.